கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு துணையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இஷாரா செவ்வந்தி தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால், அவரைப் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும், சந்தேகநபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் சுமார் 200 இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் செவ்வந்தி தொடர்பில் எந்த தகவலும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் களுத்துறை பகுதியிலுள்ள தங்க நகைக் கடைக்கு சென்ற இஷாரா செவ்வந்தி, சுமார் 500,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றதாக தெரியவந்தது. ஆனால் அவரைப் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் தென் மாகாண கடற்கரை வழியாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.