விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தனது ஒன்பது மாத விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய பிறகு, அவரது உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
அவரது புதிய புகைப்படத்தில் அவர் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமாக தெரிந்துள்ளார், இதனால் மருத்துவர்கள் அவரது உடல்நிலை பற்றி கவலைப் பட்டுள்ளனர். சுனிதா மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி பயணத்துக்குப் பிறகு, தொடர்ந்த சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நாசா வெளியிட்ட புகைப்படங்களே, சுனிதாவின் உடல்நலம் பற்றிய கடுமையான கவலைகளை உருவாக்கியுள்ளது.

முதலாவது கவலை, சுனிதாவின் மணிக்கட்டுகளின் மெல்லியதாக இருப்பது. இது எடை இழப்பு, கைகளில் தசைச் சிதைவு மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு போன்ற அறிகுறிகளை சுட்டிக்காட்டுகிறது. மேலும், சுனிதாவின் முன்னும் பின்னும் உள்ள புகைப்படங்களை ஒப்பிட்டு, அவரின் நரைத்த முடி, ஆழமான சுருக்கங்கள் மற்றும் மெலிந்த முகம் போன்ற மாற்றங்கள் கவனிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அடுத்த சில நாட்களுக்கு அவர்களால் சுயமாக நடக்க முடியாமல் அவதிப்படலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக, இது சில நாட்கள் அதிகமாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
8 நாட்கள் மட்டுமே விண்வெளியில் இருப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதும் எதிர்பாராத பல்வேறு சிக்கல்கள் காரணமாக 9 மாதங்கள் தங்கியிருக்க நேர்ந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பூமியில் தரையிறங்கும் வரை அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் கழித்தனர்.
வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கியிருக்க திட்டமிடப்பட்ட நிலையில், 9 மாதங்கள் செலவிட நேர்ந்ததால், உளவியல் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாத நிலை என்பதால், அது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு விண்வெளி காப்ஸ்யூலில் மெதுவான மரணத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு என்பது உளவியல் ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறுகின்றனர்.