கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஹூஸ்கூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற கோவில் திருவிழாவில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் இரண்டாம் நாளில், பக்தர்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட 150 அடி உயரமான தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இவ்வேளையில், எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், தேரின் கீழ் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். தேரின் வீழ்ச்சியால் அருகிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்தன.
காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 24 வயதான ஆட்டோ ஓட்டுநர் லோகித் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த 14 வயது ஜோதி உயிரிழந்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.