இஸ்ரேல் – காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. லண்டன், ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டு தேசியக் கொடிகளை ஏந்தி தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்பெயினின் சான் செபாஸ்டியன் நகரில், பாலஸ்தீன மக்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர். பிரான்ஸில், இசை வாத்தியங்கள் முழங்க, பலர் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, லண்டனிலும் மக்கள் கூடி, முழக்கங்களை எழுப்பி போராடினர். அவர்கள், இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் எனக் கோரி, தூதரகத்தை முற்றுகையிட்டனர். ஸ்வீடனிலும், காஸா மக்களுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் சாலைகளில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2023 அக்டோபர் 7 முதல், இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியாகினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டாலும், காஸாவில் உள்ள அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஹமாஸ் ஒப்பந்தத்தைக் கடைபிடிக்கவில்லை எனக் கூறி, இஸ்ரேல் மீண்டும் காஸா மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்த மோதலுக்கிடையே, இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா படையினர், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் எல்லைப் பகுதிகளை தாக்கினர். இதன் காரணமாக, தற்போது, ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து, லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.