பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டனை என்பது தவிர்க்க முடியாதது என வலியுறுத்தியுள்ளார். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு பிரித்தானியா விதித்த பயணத்தடை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது சரத் பொன்சேகா இந்த விடயத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில் ஜகத் ஜயசூரிய மற்றும் வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்ல, அவர்கள் பின்வரிசையில் இருந்தவர்கள் என தெரிவித்தார். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் அவை உரிய முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகா தனது இராணுவத் தளபதி பதவிக்காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் இவர்களை விமர்சித்ததாகவும் தெரிவித்தார். அதேவேளை போர்க்களத்தின் முன்னணியில் இருந்து போரிட்ட சவேந்திர சில்வா எந்த தவறும் செய்யவில்லை என தன்னம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் அவர் கூறினார்.