பசுபிக் பெருங்கடலில் காணாமல் போன பெருவியன் மீனவர் ஒருவர் 95 நாட்களின் பின் பத்திரமாக மீடக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் 95 நாட்களாக கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளார்.
தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி புறப்பட்டார். இவர் இரண்டு வார பயணத்தினைத் திட்டமிட்டு உணவை கொண்டு சென்ற நிலையில் , பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது. இதனால் அவர் பசுபிக் பெருங்கடலில் காணாமல் போனார். கடல்சார் ரோந்துப் படையினர் அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஈக்வடார் ரோந்துக் கப்பலான டான் எஃப், அவரை கடற்கரையிலிருந்து 1,094 கிமீ (680 மைல்) தொலைவில், நீரிழப்பு மற்றும் ஆபத்தான நிலையில் கண்டுபிடித்து மீட்டது. தனது படகில் மழைநீரை நிரப்பி அருந்தியும், கிடைத்ததைச் சாப்பிட்டும் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.