பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வியாழக்கிழமை (27) மருத்துவ கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகளே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
இதனால் வியாழக்கிழமை மதியம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவர் கலந்துகொள்ளவிருந்த பொது நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தனக்கு ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக மன்னர் சார்ள்ஸ் அறிவித்ததிலிருந்து, அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
76 வயதான சார்ள்ஸ் சுமார் மூன்று மாதங்கள் பொதுப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்த போதிலும் அரசாங்க ஆவணங்களை மதிப்பாய்வு செய்தல், பிரதமரைச் சந்தித்தல் போன்ற அரசியல் பொறுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் பிரித்தானிய முடியாட்சியின் மீது சார்ள்ஸின் உடல்நிலை குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தியுள்ளது.